Archive for the ‘Yaathumagi movie review’ Category

யாதுமாகி

பெரிய புகைப்பட கலைஞராகும் ஆசையில் வசதியான வீட்டு வாரிசான ஹீரோ, நண்பர்களுடன் தனியாக தங்கி கருமமே கண்ணாக இருக்கிறார். அதே வீட்டின் கீழ் போர்ஷனில் இருக்கும் ஹீரோயின் சுனேனாவுக்கோ இவர் மீது கண், காதல், இத்யாதி… இத்யாதி எல்லாம். ஆனால் மற்ற விஷயங்களில் எல்லாம் பெரிய தம்பியாகவும், காதல் விஷயத்தில் மட்டும் சின்னத்தம்பி பிரபுவாகவும் இருக்கும் ஹீரோ சச்சினுக்கோ, சுனேனாவின் காதலும் புரியவில்லை. கண் அசைவும் தெரியவில்லை. இந்நிலையில் சச்சினுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. கல்யாண பத்திரிகையும், கையுமாக வரும் ஹீரோவைப் பார்த்ததும் கடுப்பாகி, தன் வயதான தந்தையுடன் சொந்த ஊருக்கு கிளம்புகிறார் சுனேனா. இவர்களது காதல் கைகூடியதா? கைகழுவியதா? முதலில் நாயகியின் காதல் நாயகனுக்கு புரிந்ததா? தடை பல கடந்ததா? உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாக பதில் சொல்லியிருக்கும் இயக்குனர் பாலகுமார், அதை விறுவிறுப்பாக சொல்லாதது குறை!

புதியவர் சச்சின் நம்பிக்கை வரவு. வரும் காலங்களில் நல்ல எதிர்காலம் இருக்கிறது இவருக்கு… எனுமளவிற்கு நன்றாகவே நடித்திருக்கிறார். சுனேனா முதன் முதலாக பாவாடை தாவணியில் பளீச் என்று வலம் வருகிறார். அதுவும் அப்பாவி பெண்ணாக அச்த்தல், அபு்பா கேரக்டர் அழகன் தமிழ்மணி, அண்ணன் ரியாஸ்கான், ரமேஷ் கண்ணா, பூச்சி செந்தில் அலைஸ் எஸ்.எஸ்.குமரன் ஆகியோரில் எஸ்.எஸ்.குமரன் மட்டும் மனதில் நிற்கிறார்.

ஜேம்ஸ் வசந்தனின் இசை, முகமது நசீரின் ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு பலம் . அதேநேரம் இயக்குனர் பாலகுமாரின் திரைக்கதை, இயக்கத்தில் இருக்கும் ஓட்டையும் உடைகிறது. ஆகவே யாதுமாகி – போதுமாகி எனும் அளவிற்கு இல்லை!