வானம்
Posted in Vaanam Movie Review, latest tamil movie, tamil film review on 06/07/2011 06:14 am by admin
வெவ்வேறு விதமான லட்சியங்கள், தேவைகள், அபிலாஷைகள் இத்யாதி, இத்யாதிகளுடன் ஒரு சுபயோக சுப தினத்தில் வெவ்வேறு பகுதிகளில் கிளம்பி வந்து சென்னையில் சங்கமிக்கும் எஸ்.டி.ஆர். (அதாங்க, நம்ம சிம்பு), பரத், பிரகாஷ் ராஜ், அனுஷ்கா, சரன்யா, வேகா உள்ளிட்டவர்களது உயிரையும் பொருட்படுத்தாமல் தங்களது லட்சியங்களை காற்றில் பறக்க விட்டு, பலரது உயிர்களை காக்க காரணமாவதுதான் வானம் படத்தின் மொத்த கதையும்,
அதில் சென்னை சிட்டி பெசன்ட் நகர் பகுதியில் குப்பம் ஒன்றில் கேபிள்
கலெக்ஷன் பாயாக வசிக்கும் சிம்பு அலைஸ் எஸ்.டி.ஆருக்கு அதே பகுதியில் உள்ள பணக்கார வீட்டுப் பெண் ஒருவர் மீது காதல். அதை காதல் என்பதை விட அந்த பெண் மீது சிம்புவுக்கு ஒரு கண் என்பதே பொருந்தும். காரணம், அந்தப் பெண்ணை பார்ட்டி, டிஸ்கோதே, ஸ்டார் ஹோட்டல் பகுதிகளில் பணக்காரர் கெட்-அப்பில் சந்திக்கும் சிம்பு, அவர் மூலம் நிஜமாகவே பணக்காரர் ஜாதிப் பட்டியலில் இடம் பிடிக்க துடியாய், துடிக்கிறார். அதற்காக சிம்புவுக்கு
நாற்பதாயிரம் ரூபாய் தேவை எனும் நிலையில் நண்பர் சந்தானத்துடன் சேர்ந்துகொண்டு வழிப்பறி, ராப்பரியில் எல்லாம் ஈடுபடும் அவரிடம், சென்னையில் கிட்னியை விற்று ஊரில் தன் மகன் படிப்பை தொடர செய்யும் முயற்சியில் இறங்கும் சரண்யாவும், அவரது வயதான அப்பாவும் வகையாக சிக்குகின்றனர். சரண்யா கிட்னி விற்ற காசை சிம்பு தட்டிப் பறித்தாரா, பணக்கார காதலியின் கை பிடித்தாரா என்பது ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் மிலிட்டரியில் சேர
வேண்டும் என்ற தாயின் ஆசையை நிராகரித்து தனியாக மியூசிக் ஆல்பம் ட்ரூப் நடத்த வேண்டும் எனும் லட்சியத்துடன் சுயநலம் மட்டுமே கருத்தில் கொண்டு காதலி மற்றும் நண்பர்களுடன் சென்னைக்கு வரும் பரத் படும் பாடுகளையும், அனுஷ்கா உள்ளிட்ட அழகிகளை வைத்து அந்த மாதிரி தொழில் பண்ணும் ராணி அம்மாள் மற்றும் சென்னை சிட்டிக்கு அரவாணி அக்காவுடன் ரயிலேறும் அனுஷ்கா படும் பாடுகளையும், ஊரில் விநாயகர் ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் வாழ்க்கையை தொலைத்த தம்பியை தேடி சிட்டிக்கு கர்ப்பினி மனைவி சோனியா அகர்வாலுடன் வந்து இஸ்லாமியர் பிரகாஷ் ராஜ் படும் பாட்டையும், கலந்து கட்டி, கலக்கலாக கதை சொல்லியிருக்கும் காரணத்திற்காகவே இயக்குனர் கிரிஷை பாராட்டலாம்.
என்ன வாழ்க்கைடா இது எனும் ரிப்பீட் பஞ்ச் டயலாக்குடன், கேபிள் ராஜா அலைஸ் ராஜ்க்காக சிம்பு அலைஸ் எஸ்.டி.ஆரும், அவரது லோ கிளாஸ் நண்பர் சந்தானமும் அடிக்கும் லூட்டிகள் செம சிரிப்பு. அதிலும் ஜாதி மாறுவதற்காக எஸ்.டி.ஆருடன் சேர்ந்து கொண்டு சந்தானம் ஊரான் வூட்டு பைக்கில் செயின் பறிக்க கிளம்பு இடங்கள் செம காமெடி. படம் முழுக்க இப்படி சிரிப்பாய் சிரிக்க வைத்து விட்டு, க்ளைமாக்ஸில் உருக வைக்கும் சிம்பு ஹேட்ஸ் ஆப் சொல்ல வைக்கிறார். எஸ்.டி.ஆர். எனும் பெயர் மாற்ற ராசி ரொம்ப நன்றாகடே ஒர்க்-அவுட் ஆகியுள்ளது சிம்புவுக்கு!
அல்ட்ரா மாடர்ன் கிடாரிஸ்ட்டாக பரத், வேகாவுடன் செய்யும் கார் பயணத்தில் தொடங்கி, காதல் பயணம் வரை சகலத்திலும் இன்றைய சுயநல இளைஞர்களை பிரதிபலித்து, கடைசியில் அவர்களுக்கு சரியான சவுக்கடி தந்திருக்கிறார்.
அந்த மாதிரி பெண் சரோஜாவாக அனுஷ்கா அசத்தியிருக்கிறார். பிரகாஷ் ராஜ் தலைக்கு குல்லா, கண்களில் மை என ஒரு பிராப்பர் இஸ்லாமிய தோழராகவே பிரமாதப் படுத்தியிருக்கிறார். சந்தானம், சரண்யா, சோனியா அகர்வால், வேகா, பஜனை கணேஷாக வரும் தயாரிப்பாளர் வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட எல்லோரும் வானம் வசப்படும் அளவு நடித்திருக்கிறார்கள் என்றால், இசையமைப்பாளர் யுவனும், ஒளிப்பதிவாளர்கள் ஞானசேகர், நீரவ்ஷா ஆகியோர் வானம் வளப்படும் அளவு தங்கள் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள். வெற்றி பெற வேண்டும் என்று யார் சொன்னது? பிற உயிர்களுக்காகவும், அவர்களது லட்சியங்களுக்காகவும் உயிர்த்தியாகம் செய்யலாம் என புதிய இலக்கணம் வகுத்திருக்கிறது வானம்!
மொத்தத்தில் வானம் – தமிழ் திரையுலகின் புதிய இலக்கணம்!






