வாடா போடா நண்பர்கள்
Posted in Vaada Poda Movie Review, latest tamil movie, tamil film review on 02/17/2011 08:43 am by admin
பார்க்காமலேயே வரும் காதலைப் பார்த்தது (படங்களில்தான்) போன்று பார்க்காமலேயே நட்பும் வளரும்! அதனால் லாபமும் வரும், என்று சொல்லி வந்திருக்கும் படம்தான் வாடா நண்பர்கள்.
கதைப்படி, நண்பரின் பிரவுசிங் சென்டரில் ஓசியில் நெட், சாட்டிங் என பொழுதை போக்கும் வேலைதேடும் பட்டதாரி ஒரு ஹீரோ சிவா எனும் சி.வி.நந்தா. அவருக்கு நெட் – சாட்டிங் மூலம் நண்பராகிறார். நல்ல நண்பர்கள் கிடைக்காத வருத்தத்தில் இருக்கும் மற்றொரு ஹீரோவும் பெரும் பணக்கார இளைஞருமான அருண் எனும் ஷரண். என்ன காரணத்தினாலோ (ஆமாம்… என்ன காரணம்?) நண்பர் ஆன நாள் முதலாய் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ளாமல் நட்பு பாராட்ட வேண்டுமென்று உறுதி எடுத்துக் கொள்ளும் இருவரும் புராண காலத்து கண்ணன் – குசேலன் போன்று நெட்டில் மட்டும் நட்பு பாராட்டி வருகின்றனர். ஹீரோ சிவா அலைஸ் நந்தா எடுத்த புகைப்படங்களில் தன் காணாமல் போன தாயார் இருப்பதை பார்க்கும் மற்றொரு ஹீரோவான அருண் அலைஸ் சரண், சிவாவிற்கு ரூ.2 லட்சம் பணத்தையும் அனுப்புகிறார். முதலில் அந்த பணத்தை ஏற்க மறுக்கும் சிவா, தன் தங்கையில் திருமண செலவிற்காக அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை! அதேபோன்று சிவா தொழில் தொடங்கவும் 2 லட்சத்திற்கு மேல் இவர் கேட்காமலேயே பணம் அனுப்புகிறார் அவர்! இப்படி ஒரு பக்கம் சிவா -அருண் இருவரது நட்பு, நகமும் சதையுமாக பிரிக்க முடியாத அளவு போனிலும் நெட் சாட்டிங்கிலும் தொடர்ந்தாலும் மற்றொருபக்கம் சிவாவிற்கு அருணே நேரடி வில்லனாக விஸ்வரூபமெடுக்கிறார். அது எப்படி? ஏன்? என்பதுதான் வாடா போடா நண்பர்கள் படத்தின் வித்தியாசமான கதைக்களம்! அதனூடே சிவா – ப்ரியா எனும் யாஷிகாவின் காதல் உள்ளிட்ட விஷயங்களையும் கலந்து மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர் மணிகை.
இயக்குனரின் மெனக்கெடலை உணர்ந்து நந்தா, சரண் உள்ளி்ட்ட இருண்டு நாயகர்களும் சற்று ஓவராகவே நடித்திருக்கின்றனர். அதிலும் சரண் அந்த ஓவரிலும் ஓவர் ஆக்டிங் செய்திருப்பது முகச்சுழிப்பை ஏற்படுத்துகிறது. காட்டுக்கத்தல்தான் நடிப்பு என்று அருனுக்கு யார் சொல்லிக் கொடுத்ததோ… தெரியவில்லை?! படத்தில் உருக்கமான காட்சிகள் இல்லை என்பதற்காக க்ளைமாக்ஸில் ஒரு ஹீரோ மற்றொரு ஹீரோவை தீர்த்துக் கட்டுவதும அபத்தமாக இருக்கிறது. ஏன் சார் இப்படி?

சிவாவின் காதலில ப்ரியாவாக வரும் யாஷிகா வழக்கமான ஹீரோயின்தான். ஹீரோயின் என்றால் அவரது நடை- உடை- பாவனை இப்படித்தான் இருக்க வேண்டுமென்று யாரோ சொல்லிக் கொடுத்து செய்வது போன்றே ஓடி, ஆடிப்பாடி நடித்திருக்கிறார். பாவம். நிழல்ரவி, பாக்யஸ்ரீ, கிரான் மனோகர், ஸ்ரீநாத் என இன்னும் சிலரும் படத்தில் தாங்களும் இருக்கிறோம் எனபதை அவ்வப்போது தலைகாட்டுவதில் மூலம் உணர்த்துகின்றனர்.
அருண்ஜேம்ஸின் அழகிய ஒளிப்பதிவும், சித்தார்த்தின் இனிய இசையும் படத்தின் பெரும் பலம். அதிலும் சித்தார்த்தின் இசைப் பாடல்கள்தான் வாடா போடா நண்பர்கள் படத்தின் சிறப்பம்சம். புதியவர் சித்தார்த்துக்கு இனிமையான பாடல் இசைக்காக ஒரு ஷொட்டும், இரைச்சலான பின்னணி இசைக்காக ஒரு குட்டும் வைக்கலாம். தப்பில்லை!
இரு ஹீரோக்களும் படத்தில் பார்க்காமலேயே நட்பு கொள்வதால் பிரண்ட்ஷிப் சீன்களை டயலாக்கிலேயே வைக்க முயன்றிருக்கும் இயக்குனர் மணிகை, படத்தின் மொத்த கதையையும் சிங்கப்பூர் தயாரிப்பாளர் பி.அருமைச்சந்திரனிடம் போனிலும், சாட்டிங்கிலும் சொல்லி, வாய்ப்பை பெற்றிருப்பாரோ எனும் சந்தேகத்தை கிளப்புகிறது படத்தின் பெரும்பாலான காட்சிகள். அவற்றை தவிர்த்து விட்டு பார்த்தால் வாடா போடா நண்பர்கள், ரசிகர்களை வராதே போடா என்று சொல்லாமல் இருப்பதே உத்தமம்!






