தென்மேற்குப் பருவக்காற்று
Posted in Then Merku Paruvakattru Movie Review, latest tamil movie, tamil film review on 01/15/2011 03:26 pm by admin
தென்மேற்குப் பருவக்காற்றைத் தேனிப்பக்கம் மட்டுமல்ல, தமிழகத்தின் அத்தனை கிராமங்களுக்கும் வீச வைத்திருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி
ஊர் ஊருக்கு ஆடுகளைத் திருடும் ஒரு கும்பல். அவர்களை விரட்டியடிக்கும், ஆட்டுக்கார ஹீரோ முருகையன். வழக்கமான இந்த விரட்டலில் ஆடு திருடிய ஒருவன் சிக்கிக் கொள்கிறான். சிக்கிய திருடன் ஆண் அல்ல, ஒரு பெண். ஆட்டை விட்டுவிட்டு இவன் மனதைத் திருடித்கொண்டு போய்விடுகிறாள். வெட்டு, குத்து என்று தேனி மண்ணுக்கே உரிய ரத்த புழுதியில் இவர்களின் காதல் படும்பாடுதான் கதை. கூடவே, ஈரம் துளிர்க்காத கண்களையும் ஈரப்படுத்தும் தாய் சென்டிமெண்டைப் புகுத்தி, ஒரு கிராமத்தின் நிஜ வாழ்க்கையை கண்முன் நிறுத்துகிறார்கள்.
அந்த கரிசல் மண்ணில் புழுதி பறக்க, தாய் சரண்யா ஏர் ஓட்டுவதைப் பார்த்து ஆண்களே வெட்கப்படவேண்டும். இவரைச் சுற்றித்தான் கதையே. மகன் முருகையன் சாராயம் குடித்து வந்தாலும் அவன் மேல் காட்டும் பாசமாகட்டும், மகனுக்குப் பெண் பார்ப்பது, ஊராருக்கு மருமகளை அடையாளம் காட்வது, மகனைத் காதலிக்கும் கள்ளச்சியின் ஊருக்கே போய் சண்டை போடுவது, மகனின் காதலை ஏற்றுக்கொண்டபின், எதிரிகளால் வயிற்றில் குத்துப்பட்டும் நடந்தே ஆஸ்பத்திரிக்குப் போவது என்று ஒரு கள்ளிக்காட்டு தாயாகவே வார்க்கப்பட்டிருக்கிறார் சரண்யா.
முருகையனாக வரும் புதுமுகம் விஜய் சேதுபதி கிராமத்து ஹீரோவுக்கான கச்சிதத் தேர்வு. பேச்சியாக வரும் வசுந்தரா வாயால் பேசுவதைவிட கண்களால் பேசுவது அதிகம். ஒரு கிராமத்துக்கு காதல் கவிதையாய் மனதிற்குள் புகுந்து வருடிவிட்டுப் போகிறார்கள் இருவரும். சட்டையைக் கழற்றி காதலிக்கு “டாடா காட்டுவது புதுசு. முருகையனின் நண்பனாக வந்து நாட்டு நடப்பை மண்வாசனையோடு நக்கலடிக்கும் தீப்பெட்டி கணேசன், வில்லனாக வரும் அருள்தாஸ், குமார், “”நமக்காத்தானயா ஜெயிலு கட்டி வச்சிருக்காங்க. சந்தோஷமா போயிட்டு வாய்யா… என்று வில்லன் மகனை வாழ்த்தி அனுப்பம் தாய்க்கிழவி. இப்படி கிராமத்து நிஜமனிதர்கள் நிஜமுகங்களாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
தென்மேற்குப் பருவக்காற்றின் சிலிர்ப்பை பருவக்காற்றின் சிலிர்ப்பை ஒளிப்பதிவில் உணர வைத்திருக்கிறார் செழியன். குறிப்பாக ஆடு திருடும் காட்சிகள்.
“”ஏண்டி கள்ளச்சி என்னை தெரியலியா…, “”கள்ளிக்காட்டில் பிறந்த தாயே போன்ற வைரமுத்துவின் மண்வாசனை வரிகளுக்கு உயிர்ப்பு கொடுத்திருக்கிறார் புது இசையமைப்பாளர் என்.ஆர்.ரஹ்நந்தன்.
“”உன் புள்ளைய நீயே வெச்சுக்கோ, எனக்கு அவன் உசிரு ரொம்ப முக்கியம் என்று காதலி பேச்சியை பேச வைத்து, கதையை புதிய தடத்தில் ஓடவிடுவது போன்ற இயக்குநரின் முத்திரை பல இடங்களில் பளிச். ஆனால் சரண்யா வில்லன்களைத் தேடிப்போய் குத்துப்பட்டுச் சாவது லாஜிக் தடுமாற்றம். மற்றபடி. வியாபாரத்தனமில்லாத ஒரு யதார்த்த சினிமாவை அடையாளப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.






