பையா
Posted in Karthick in Paiyaa story, Paiyaa movie review, latest tamil movie, surya brother karthick in Paiyaa, tamil film review, thamanna in Paiyaa on 04/13/2010 08:19 am by admin
ஹாலிவுட் பட பாணியில் ஒரு பிஸியான ஹை வே, சில பெட்ரோல் பங்க்கள், சில மோட்டல்கள், ஐந்தாறு காஸ்ட்லி கார்கள், படம் முழுக்க சேஸிங்… ஏழெட்டு கேரக்டர்கள், சில ரிச் பைட்கள்… என பையா படு ஸ்டைலாக இருக்கிறது. அதனால் ஹிட்சர், ஹை வே உள்ளிட்ட ஹாலிவுட் படங்களின் காப்பியோ? எனும் சந்தேகத்தையும் கிளப்பி விடுவது காமெடி!
கதைப்படி வேலை தேடி பெங்களூருவில் தோழன் – தோழிகளுடன் காஸ்ட்லியான கார், பங்களாடன் வசதியாக தங்கியிருக்கும் பொறியியல் பட்டதாரி சிவா. அதாங்க கார்த்தி. அவர் வேலைதேடி அப்ளிகேஷன் கொடுத்து சிபாரிசுடன் அலையும் இரண்டொரு சந்தர்ப்பங்களில் சாருலதாவை (இதுதான் தமன்னாவின் பாத்திர பெயர்) எதிர்பாராமல் சந்திக்க., காதலித்தால் இவளை காதலிக்கணும்… இல்லை இவளை காதலித்தவன் காலை தொட்டுக் கும்பிடணும் எனும் பாலிஸியுடன் சாருவுடன் ட்ரீமிலும், டூயட்டிலும் வாழ ஆரம்பிக்கிறார். இந்நிலையில் வெளியூரில் இருந்து வரும் நண்பனை பிக்-அப்பண்ண காருடன் ரயில்வே ஸ்டேஷன் போகிறார் கார்த்தி. என்ன ஆச்சர்யம்? தமன்னாவும் அவருடன் வரும் ஆனும் ரயிலை மிஸ் பண்ணிட்டோம், அவசரமாக சென்னை போகணும். வர முடியுமா? எனக் கேட்டு கார்த்தியை கார் டிரைவர் ஆக்க…, ரயிலில் வந்திறங்கும் நண்பனையும், அவரது குடும்பத்தையும் அம்போ என விட்டு விட்டு,
தமன்னா அண்ட் கோவினருடன் காரிலேயே சென்னை புறப்படுகிறார். அப்புறம்… அப்புறமென்ன..? பட்ரோல் பங்கில் கூட வந்தவரை கழற்றி விட்டு, கார்த்தியிடம் கதை, கதையாக சொல்லும் தமன்னா, வண்டியை மும்பைக்கு விடச் சொல்கிறார். கார்த்தியும் சொன்னதை கேட்கும் கிளிப்பிள்ளை மாதிரி மும்பைக்கு வண்டியை விரட்ட, ஒரு பக்கம் இந்த பயணத்தில் தமன்னா தன் சோக கதை முழுவதையும் சொல்ல, இன்னொரு பக்கம் வில்லன் கோஷ்டி இவர்களை துரத்துகிறது. தமன்னாவை துரத்துபவர்கள், பிளாஷ்பேக் பகை ஒன்றால் கார்த்தியை துரத்துபவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு இருவரையும் விரட்ட, இருவரும் அவர்களிடம் இருந்து தப்பி பிழைத்தார்களா? இருவருக்குள்ளும் காதல் கண்ணாமூச்சி காட்டியதா, இல்லையா? இருவருக்கும் இத்தனை பெரிய விரோதிகள் ஏற்படக் காரணம் என்ன? உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு ஆபத்தான வளைவுகளுடன் அழகாக பதில் சொல்கிறது பையா படத்தின் மீதிக்கதை.
சிவாவாக கார்த்தி ஆயிரத்தில் ஒருவனைக் காட்டிலும் அழகாகவும், பருத்தி வீரனைக் காட்டிலும் சுமாராகவும் நடித்து சபாஷ வாங்கி விடுகிறார். நாயகி சாருலதாவா தமன்னா பொம்மை போல் பளிச் என வந்து தன் மென்மையான நடிப்பாலும், துடிப்பான பெண்மையாலும் வழக்கம்போல நம்மை கவருகிறார்.
மும்பை வில்லன் மிலிந்த் சோமன், காமெடியன் ஜெகன், கார்த்தியின் காஸ்ட்லீ தோழி – தோழர்கள் சோனியா தீப்தி, உமர், சித்தார்த், ஆஸிஸ் உள்ளிட்டவர்கள் அவர்களது பங்கை அழகாக செய்துள்ளனர். சீனில் வராமல் போனிலேயே கில்லியாக தெலுங்கு பேசும் வில்லி, மகளுக்கே கொடூரம் இழைக்கத் துடிக்கும் அப்பா, ஓடிப்போனவள் மகள் என தமன்னாவை மும்பையின் வசதியான வர்த்தக குடும்பம் என பணக்காரர்களின் பயமான வாழ்க்கையை படம் பிடித்துக் காட்ட முயன்றிருக்கும் டைரக்டர் லிங்குசாமியின் பங்கும், பாங்கும் பிரமாதம். அதேநேரம் சண்டைக்காட்சிகள் லிங்குவின் முந்தைய படமான பீமாவையும், சேஸிங் காட்சிகள் சண்டைக்கோழி, கில்லி படங்களையும், படக்காட்சிகள் ரன் படத்தையும் ஞாபகப்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில், துளி துளி…, அடடா மழைடா, என் காதல் சொல்ல… உள்ளிட்ட மூன்று பாடல்கள் என்றால் மீதி மூன்றும் ஹிட் என்பதும் உண்மை! பையா கார்த்தி பல இடங்களில் கண்டேன் காதலை பரத்தையும், பையா படம் ஹிட்சர், ஹை வே ஹாலிவுட் த்ரில்லர் சேஸிங் படங்களையும் ஞாபகப்படுத்துவதை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அந்தப் படங்களை பார்க்காதவர்களுக்கு பையா பொய்யா, மெய்யா… எனும் பிரமிப்பையும், பிரமாண்டத்தையும் நிச்சயம் தரும்.












