சகாக்கள்
Posted in Saghakkal Movie Review, latest tamil movie, tamil film review on 08/16/2011 08:10 am by admin
கண்டதும் காதல், காணமலேயே காதல், கெட்டதும் காதல், கிழிந்ததும் காதல் என ஏகப்பட்ட இல்லாத பொல்லாத காதல்களை எல்லாம் சொல்லி இருக்கும் தமிழ் சினிமா, சரியானதொரு காதலை “சகாக்கள்” படத்தின் மூலம் சொல்லி, சபாஷ் வாங்கியுள்ளதென்றால் மிகையல்ல! என்ன ஒரே ஒரு குறை… கண்ட கண்ட கள்ள காதல்கள் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில், நல்லதொரு காதலை க்ளைமாக்ஸில் சோகமாக்கி சூடு வைத்துக் கொண்டிருப்பதுதான் சகாக்களின் சகிக்க முடியாத துயரம்!
கதைப்படி காதலித்தால் இவளைத்தான் காதலிக்கனும், கைபிடித்தால் இவளைத்தான் கரம்பிடிக்கணுமென்று, பஸ் ஸ்டாண்டில் ஏதேச்சையாக பார்த்த பேரழிகியை தன் காதலியாக கற்பனை செய்து கொண்டு, தன் சகாக்களிடம் இஷ்டத்திற்கு ரீல் சுற்றும் ஹீரோ, ஒ
ரு நாள் ஹீரோயினிடம் சிக்குகிறார்! அப்புறம்? அப்புறமென்ன…? அவர் சுற்றிய ரீல்கள் அத்தனைக்கும் அவர் தரும் விளக்கமும், கல்யாணத்திற்கு பின்பும் காதல் செய்தல் வேண்டும் எனும் சொல்லாக்கமும் நாயகிக்கும், நாயகன் மீது காதலை ஏற்புடுத்துகிறது. வெவ்வேறு சாதியை மட்டுமல்ல, வசதியையும் சார்ந்த இவர்களது காதல் சேர்ந்ததா…? சீரழிந்ததா…? என்பதுதான் மீதிக்கதை!
குளிர்-100 உள்ளிட்ட படங்களில் நாயகராக ஏற்கனவே அறிமுகமான சஞ்சீவ் ஹீரோவாக நடித்திருக்கிறார். முந்தைய படங்களை காட்டிலும் நடிப்பில் நல்ல முதிர்ச்சி. காதலில் தோல்வியையே சுவைக்காத இவர் படம்முழுக்க தாடியுடனேயே திரிவது ஏன்…? என்பது இயக்குநருக்கே வெளிச்சம்!
கிராமத்து கதாநாயகியாக பாவாடை – தாவணியில் புதுமுகம் அத்வைதா, பெங்களூரு அழகியாம்! படத்தில் பார்த்தால் கதையில் வரும் காரைக்குடி பெண் மாதிரியே, மூக்கு முழியுமாய் என்னமாய் எல்லோரது, மனதையும் கரைக்கிறார் பேஷ், பேஷ்!
நா
யகரின் நண்பர்களாக டூப் நடிகர்களை வைத்துக் கொண்டு படத்தின் முன்பாதியை டாப்கியரில் கொண்டு செல்லும் மெய்யராக சங்கரும், லெஃப்ட் பாலுவாக சிவசங்கரும், நண்பரின் காதலுக்கு ஒரு வித பயத்துடனேயே உதவும் சகாக்களாக படம் முழுக்க பட்டையை கிளப்பி இருக்கின்றனர். இவர்களோடு வெண்ணிற ஆடை மூர்த்தி அடிக்கும் லூட்டி வேறு, தியேட்டரில் விசில் சப்தத்தை கிளப்புகிறது. தயா ரத்னத்தின் இசை, ஸ்ரீ எம்.அழகப்பனின் ஒளிப்பதிவு இரண்டும் படத்தின் பெரிய பலம்!
பொது கழிப்பிடத்தில் தங்கள் காதல் ஆரம்பமானதாக ஹீரோ பீலா, க்ளைமாக்ஸில் காதல் ஜோடிகளை காரில் அம்போவென விட்டு, விட்டு போய் சகாக்கள் இருவரும் தண்ணியடிக்க செல்வது, அதனால் ஏற்படும் விபத்து, அதனால் மாறும் கதையின் போக்கு… உள்ளிட்ட ஒரு சில முகம் சுளிக்க வைக்க காட்சிகளை ஒதுக்கிவிட்டு பார்த்தால், “சகாக்கள்” படத்திற்கு சொல்லாமல் சொல்லலாம் “சபாஷ்கள்”.
மொத்தத்தில் எல்.முத்துக்குமார சுவாமியின் எழுத்து இயக்கத்தில், “சகாக்கள்” பாதி “சபாஷ்கள்” மீதி….?!






