நெல்லு
Posted in Nellu Movie Review, latest tamil movie, tamil film review on 01/02/2011 08:18 am by admin
பல வருடங்களுக்கு முன் தஞ்சை – நாகை பகுதியில் உள்ள கீழ் வெண்மணி கிராமத்தில் கூலி உயர்த்தி கேட்டதற்காக நடந்த இனப் படுகொலைகளை இப்பொழுது பதிவு செய்ய முயன்றிருக்கும் படம்தான் நெல்லு.
கதைப்படி, தஞ்சை பகுதியின் பெரிய நிலச்சுவான்தார் பெரியதம்பி. கூலி உயர்த்தி கேட்கும் விவசாய தொழிலாளர்களை வேரோடு வீழ்த்தும் வர்க்கத்தை சார்ந்த அவர், அதற்காகவே சுற்றுப்பட்டி கிராமங்களில் உள்ளி மாராசு மற்றும் பண்ணையார்களை ஒன்று சேர்த்துக் கொண்டு நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் என்ற ஒன்றை ஆரம்பித்து அதன் தலைவராகவும் இருந்து கொண்டு அநியாயங்கள் பல புரிகிறார். தன்னை கடவுளாக கருதும் அவர், கீழ் ஜாதிப்பெண்கள் பருவம் அடைந்ததும் முதல் ஆளாக அவர்களை தன் இச்சைக்கு விருந்தாக்கும் கொடூரங்களையும் புரிகிறார். இதையெல்லாம் தட்டி கேட்டு சரியான பாடம் புகட்ட, விவசாய தோழர்களை ஒன்று சேர்க்கின்றனர் இளைஞர்கள் கதிரும், முத்துச்சாமியும். அவர்களையும் அவர்கள் பின் நிற்கும் கிராம மக்களையும் பெரிய தம்பி என்ன பாடுபடுத்துகிறான். அவனுக்கு அதிகாரத்தை கையில் வைத்திருக்கும், போலீஸ் எப்படி உதவுகிறது… என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது நெல்லு படத்தின் மீதிக்கதை!
கதிராக சத்யா, முந்தைய படங்களை காட்டிலும் நன்றாகவே
நடித்திருக்கிறார். ஆனாலும் கீழ்ஜாதி விவசாய தொழிலாளி கெட்-அப் சத்யாவுக்கு அத்தனை பொருத்தமாக இல்லாதது குறை! க்ளைமாக்ஸில் தீயுடன் சேர்ந்து இவரது காதலும் பொசுங்குகிறது நெஞ்சை உருக்குகிறது.
கதிரின் காதலி தாமரையாக பாக்யாஞ்சலி, கிராமத்து பெண்ணாக செம உதார் விட்டிருக்கிறார். இவரும் கதிர் – சத்யாவும் வாயோடு வாய் வெற்றிலை மாற்றிக் கொள்ளும் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது.
வில்லன் பெரியதம்பியாக வரும் ஓ.ஏ.கே.சுந்தர் கீழ் ஜாதியினரை சில வருடங்களுக்கு முன்புவரை அடிமை படுத்த நினைத்த மேல்ஜாதியினரை அச்சரம் பிசகாமல் பிரதிபலித்திருக்கிறார். பேஷ்! பேஷ்!! கீழ்ஜாதி பெண்கள் வேண்டும்! கீழ் ஜாதியினர் வேண்டாம் எனும் இவரது கொள்கை ஒன்று போதும் ஆண்டான் அடிமை காலத்திய அடிமைத்தனத்தை விளக்குவதற்கு!

வடிவாக வர்ஷா, செல்லமாக ருக்ஷானா, அன்னக்கிளியாக விஜிஷா, கதாநாயகனின் அம்மாவாக ஸ்ரீபாரதி ராமானுஜமாக வாசு விக்ரம், பண்ணையாராக திருப்பதி என ஏகப்பட்ட நடிகர்கள் படத்தில் இருந்தாலும், முடி வெட்டுபவராக வரும் கோவை செந்தில், கிரேன் மனோகர், போண்டா மணி அண்ட் கோவினரின் காமெடியும் சிங்கமுத்து, பாவா லட்சுமணின் ஜோதிட காமெடியும் என்டர்டெய்ன்மெட் சமாச்சாரங்கள். மற்றவை எல்லாம் நடந்து முடிந்த நிஜம் என்பதால் சற்றே போரடிக்கிறது. அதை போக்கும் விதமாக எஸ்.எஸ்.குமரனின் இசையும், ஸ்ரீபவன் சேகர், செந்தில்ராஜ் இருவரது ஒளிப்பதிவும் அமைந்துள்ளது ஆறுதல்! எம்.சிவசங்கரின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் நெல்லு 1967 – வரலாறு என்ற வகையில் ஓ.கே.!






