நான் மகான் அல்ல
Posted in Naan Mahan Alla Movie Review, latest tamil movie, tamil film review on 09/02/2010 08:22 am by admin
தனது முதல் படம் வெண்ணிலா கபடிக்குழு படத்தை முற்றிலும் கிராம சூழலில் ஹிட்டாக கொடுத்த இயக்குனர் சுசீந்திரன், தனது இரண்டாவது படத்தை முற்றிலும் சென்னை நகர பின்னணியில் எடுத்திருக்கிறார். ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் க்ளொட் நைஜ் மூவீஸ் சார்பில் தயாநிதி அழகிரி வழங்கும் படம் நான் மகான் அல்ல.
வேலையில்லாத இளைஞன் ஜீவா (கார்த்தி), சிநேகிதியின்
திருமணத்தில் வசதியான குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் ப்ரியாவை (காஜல் அகர்வால்) சந்திக்கிறான். கண்டதும் காதல். பாசமுள்ள குடும்பத்தை சேர்ந்த கார்த்தியின் தந்தை ஜெயபிரகாஷ், ஒரு கால்டாக்ஸி டிரைவர். நகரில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண்ணை தன் வண்டியில் ஏற்றிச் சென்றதை இவர் நினைவில் வைத்ததால் தொடரும் பிரச்னைகள். கொலைகார கும்பல் இவர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சிக்கிறது. அதில் தப்பிப் பிழைக்கும் ஜெயபிரகாஷை கத்தியால் குத்தி சாகடிக்கிறது அந்த கும்பல். தனக்கு தெரிந்த தாதா உதவியுடன் அவர்களை தேடும் கார்த்தி, இறுதியில் தனியே அவர்களை பழிவாங்குகிறார்.
மிகவும் இயல்பாக எந்த செயற்கைத்தனமும் இன்றி கார்த்தி, ஜீவாவாக சிறப்பாக நடித்திருக்கிறார். மயக்கும் புன்முறுவல், நினைத்ததை பேசும் சுபாவத்துடன் நம்மை மகிழ்விக்கிறார். இவரது திறமையில் நம்பிக்கை வைத்த இயக்குனரை பாராட்ட வேண்டும். பல காட்சியில் கார்த்தி நம்மை சிரிக்க வைக்கிறார். ப்ரியாவை தனக்கு போனில் பேச வைக்கும் தந்திரம், முதல் சந்திப்பிலேயே ப்ரியாவின் காதலை பெறுவது, கார்
த்தியை காதல் விவகாரத்தில் மிரட்டி வைக்க ப்ரியாவின் தந்தை வரவழைக்கும் லோக்கல் தாதா குட்டி நடேசனிடம் இயல்பாக பேசி, அவரையே காதலுக்கு சிபாரிசு செய்ய வைப்பது, தனியார் வங்கியின் கடன் வசூலிக்கும் ஏஜென்டாக சென்று, பல வாடிக்கையாளர்களிடம் சென்டிமெண்ட்டாக ஏமாறுவது, இரண்டாவது பாதியில் கொலைகார கும்பல் தேடுவது என எல்லா காட்சிகளிம் கார்த்தி இஸ் குட். தொடர்ந்து இதே ஸ்பீடில் சென்றால் மற்ற ஹீரோக்கள் உஷாராக இனி இருக்க வேண்டிவரும். வெல்டன் கார்த்தி.
அழகாக வந்து காதலிக்கிறார் காஜல்அகர்வால். அவர் படத்தின் இரண்டாம் பாதியில் காணாமல் போவது சற்று வருத்தமே.
கார்த்தியின் சிநேகிதி சுதாவாக நீலிமா, தந்தையாக ஜெயபிரகாஷ், தனியார் வங்கி தோழராக சூரி, தாயாக லட்சுமி ராமகிருஷ்ணன் என அனைவரும் தங்கள் பாத்திரங்களை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். கார்த்தியும், காஜலும் அறிமுகமாகும் நிலவைப் பிடிச்சு என்ற பாடல், இறகைப் போல என்ற காதல் டூயல் பாடல் ஆகியவை யுவன் சங்கர் ராஜாவுக்கு பெயர் சேர்க்கும். கார்த்தியை வேலையை விட்டு தூக்கும் வங்கி அதிகாரியை கார்த்தியும், சூரியும் சமாளிக்கும் விதமும், மீண்டும் பணியில் சேருவதும் சுவாரசிய காட்சிகள்.
எந்த முன்விரோதமும் இன்றி, இரு பெண்களை கற்பழித்து கொன்று உடலை வெட்டி, பாகம் பாகமாக தூக்கி எறியும் கும்பல், போலீசில் அகப்பட்டுக் கொள்வோமோ என்று திட்டம் போட்டு கார்த்தியின் தந்தையை கொல்வது, இறுதியில் கார்த்தியையும் தீர்த்துக்கட்ட முயற்சிப்பது என எல்லாமே யதார்த்தமாக, விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் நான்கு மாணவர்கள், இப்படி செய்வார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. நகர வாழ்க்கையின் யதார்த்த அவலமா இது? ஹீரோவின் ஹீரோயிஸம் காட்ட, தமிழக போலீசை இப்படி செயல்படாதவர்களாக ஆக்கியிருப்பதும் நெருடல்.
மதியின் காமிரா சிறப்பாக இயங்கியிருக்கிறது. பாஸ்கர் சக்தியின் வசனங்கள் பல இடங்களில் பளிச். சுசீந்திரன் – கார்த்தி கூட்டணி நன்றாக ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது.
நான் மகான் அல்ல : முதல் பாலி மென்மையான கவிதை ; இரண்டாம் பாதி வன்முறை ஓவர் டோஸ்!






