மூணார்
Posted in Moonaaru Story on 01/22/2010 04:14 pm by adminஅரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்பது பழமொழி. ஆனால் கொலை செய்யப்பட்டவனே தன் கொலைக்கு காரணமானவர்களை கொல்வான்… என்கிறது மூணார் படத்தின் புதுமொழி. அதற்காக இது ஆவி படமோ…? என படயந்து விடாதீர்கள். இறந்ததாக கருதப்படும் ஹீரோவே… உயிருடன் எழுந்து வந்து தன் கொலைக்கு காரணமானவர்களை கொடூரமாய் கொலை செய்வதே மூணார் படத்தின் கதைக்கருவும், களமுமாகும்!
கதைப்படி மூணாருக்கு ஹனிமூன் போகும் புதுமண ஜோடியில் நாயகி மட்டும் பைத்தியமாகி திரும்பி வருகிறார். நாயகர் என்ன ஆனார்? என்பது புரியாத புதிராக இருப்பதால் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நாயகரின் அண்ணன், தன் தம்பியை தேடி கண்டுபிடிக்க கோர்ட் படியேறுகிறார். இந்த கேஸில் சாதாரண போலீஸ் சாதாரணமாகவே இருந்து விட, சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிடுகிறார் நீதிபதி. ஒருபக்கம் சிபிஐ அதிகாரி ரஞ்சித் தன் சகாக்கள் வையாபுரி, ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோருடன் புதுமுக நாயகர் என்ன ஆனார்? என துப்பு துலக்க, மற்றொரு புறம் அந்த விபத்தில் ஆள் அடையாளமே மாறிப்போன ஹீரோ, தன் கொலைக்கு காரணமான டிராவல்ஸ் அதிபர் பிரேம், பிரேமின் நண்பர்கள், தன் மனைவி உள்ளிட்டவர்களை திட்டமிட்டு தீர்த்துக் கட்டுகிறார். அவர் செய்யும் கொலைகளுக்கு சாட்சியாக கவர்ச்சி நடிகை ரகசியா படத்திலும் கவர்ச்சி டான்சர் பாத்திரத்திலேயே வந்து சிபிஐ ஆபீசர் ரஞ்சித்துக்கு உதவுகிறார். இதுதான் மூணார் படத்தின் ஒட்டுமொத்த கதையும்! கடந்த சில வருடங்களுக்கு முன் தன் புது மனைவியுடன் மூணார் ஹனிமூன் போன கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் சந்திரமவுலியாக வரும் புதுமுகமும், அவரது மனைவியும் பாத்திரத்திற்கேற்ற தேர்வு.
நீதிபதி கே.ஆர்.விஜயா, அண்ணன் சுந்தர்ராஜன், சிபிஐ ஆபிசர் ரஞ்சித், அவரது உதவியாளர்கள் வையாபுரி, சுந்தர் மற்றும் வடிவுக்கரசி, பிரேம் உள்ளிட்ட நட்சத்திரங்களும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள். அதே மாதிரி கே.தம்பிதுரையின் சஸ்பென்ஸ், த்ரில் கதை – திரைக்கதை – வசனம் – இயக்கமும் நீண்ட நாட்களுக்கு பின் வேதம் புதிது இசையமைப்பாளர் ரவீதேவந்திரனின் இசையும் படத்திற்கு பலம்!
ரகசியா போகும் இடங்களிலேயே தன் கொலைக்கு காரணமாவர்களை புதுமுக ஹீரோ சந்திரமவுலி தீர்த்துக் கட்டுவதும், தன் புது மனைவியின் மாஜி காதலன்தான் தன் கொலைக்கு காரணம்… தன் மனைவிக்கு துளியும் அதில் சம்பந்தமில்லை… என தெரிந்தும், மனநிலை பாதிக்கப்பட்டவராய் நடிக்கும் மனைவியையும் தீர்த்துக் கட்டுவது புரியாத புதிராவது உள்ளிட்ட இன்னும் பல சினிமாட்டிக் மிஸ்டேக்குகள் தவிர்த்து விட்டு பார்த்தால் மூணார் தரில் தேனாறு!
மூணார் : சில இடங்களில் சஸ்பென்ஸ் பாலாறு! பல இடங்களில் த்ரில் தேனாறு!!










