Archive for the ‘Madhya Chennai Film Review’ Category

மத்திய சென்னை

சினிமா வாய்ப்பு தேடி சுற்றும் இளைஞர்களுக்கும் சமூக அ‌க்கறை உண்டு என்பதை வலியுறுத்தி வெளிவந்திருக்கும் படம்தான் மத்திய சென்னை.

கதைப்படி மத்திய சென்னை பகுதியில் உள்ள ஒரு குப்பத்தில் தங்கி சினிமா வாய்ப்பு தேடும் இளைஞர்கள் சிலருக்கும், அந்த குப்பத்திற்கு நல்லது செய்வதுபோல் நடித்து அந்த குப்பத்தையே அபகரித்து ஐ.டி. கம்பெனி கட்ட திட்டமிடும் வில்லன் மகா தேவனுக்குமிடையில் ஏற்படும் முட்டலும், மோதலும்தான் மத்திய சென்னை படத்தின் மொத்த கதையும்!. இதில் வழக்கம்போல வில்லன் மகாதேவனின் மகள் ரம்யா பர்னாவுக்கும், ஹீரோ ஜெயவந்த்துக்கும் இ‌டையில் ஏற்படும் காதல், வழக்கத்திற்கு மாறாக இயக்குனராக போராடும் ஜெய்வந்திற்கு தன் அப்பாவின் பணத்தை அடித்து வந்து கொடுத்து படம் எடுக்க சைலண்ட் புரொடியூசராகும் ஹீரோயின், படம் முடிந்து பர்ஸ்ட் காப்பி ரெடியாகும்போது தன் தந்தையாலேயே கொல்லப்படுவது உள்ளிட்ட இன்னும் பல எதிர்பாரா திருப்பங்களையும், திடுக்களையும் கலந்து கட்டி, நல்ல மெசேஜ் சொல்ல முற்பட்டிருக்கின்றனர்.

புதுமுகம் ஜெய்வந்த் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். டான்ஸ், பைட், நடிப்பு எல்லாவற்றிலும் பாஸ்மார்க் வாங்கி விடும்‌ ஜெய்வந்த், அடுத்தடுத்த படங்களில் பர்ஸ்ட் கிளாஸ் எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஹீரோயின் ரம்யா பர்னா, வில்லனின் மகள் என்றாலும் தமிழ் சினிமா வழக்கப்படி அப்பாவிற்கு அடங்காமல் ஹீரோவை காதலித்து, அவரது லட்சியமான சினிமா படம் இயக்க துணை நின்று, அவருடன் ட்ரீம் ஸாங் பாடி, இறுதியில் தன் உயிரையும் தியாகம் செய்து படத்தில் காணாமல் போனாலும், படம் பார்ப்பவர் மனதில் பச்சக் என பசை போட்டு ஒட்டிக் கொள்கிறார்.

‌ஜெய்வந்த், ரம்யா பர்னா இருவரும்தான் நாயகன் – நாயகி என்றாலும் பிரகாஷ் ராஜ், சங்கீதா இருவரும் கெஸ்ட் ரோலில் ‌பெஸ்ட் ஆக்டிங் கொடுத்திருக்கின்றனர். கஞ்சா கருப்பு சண்முகராஜன், சார்லி, ரகசியா, வடிவுக்கரசி உள்ளிட்டவர்களும் தங்கள் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கின்றனர்.

நாயகியின் மறைவுக்கு பிறகுதான் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா என்பதே தெரியவருகிறது. பின்னணி இசையும் சரி, பாடல்களும் சரி,  வேறு எந்த காட்சியிலும் ராஜாவை அடையாளம் காட்ட முற்படாதது வருத்தம். அதே மாதிரி ஒளிப்பதிவாளர் கார்த்திக் ராஜாவும் கடைசி வரை கப்சிப் என்றே படத்தை ஒளிப்பதிவு செய்து முடித்திருக்கிறார். விவேகானந்த் – வீரசிங்கம் என இரட்டை இயக்குனர்கள் இணைந்து இயக்கியிருக்கும் படம் என்பதாலோ, கதையையும் நல்ல மேசேஜையும் தேர்ந்தெடுத்தவர்கள் திரைக்கதையிலும், இயக்கத்திலும் கோட்டை விட்டிருக்கிறார்கள்.