Archive for the ‘Kani Mozhi Movie Review’ Category

கனிமொழி

அயிட்டம்டான்ஸ் எனப்படும் ஒத்தபாட்டுக்கு குத்தாட்டம் போடும் கவர்ச்சி நடிகையாக தன் திரையுலக வாழ்க்கையை ஆரம்பிக்க தொடங்கிய நடிகை சோனா ஹைடன், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் கனிமொழி. தனது தயாரிப்பு என்பதால் தானும் நடித்தே தீருவேன் என்று அடம்பிடிக்காமல் தயாரிப்பு பொறுப்பை கூட அம்மா கிரியேஷன்ஸ் சிவாவிடம் கொடுத்து அடக்கி வாசித்து இருக்கிறார் சோனா என்பது பாராட்டுக்குரியது.

கதைப்படி கதாநாயகர் ஜெய் தனக்கு பாதகமாக அமையும் விஷயங்களைக்கூட சாதகமாக நடந்ததாக கற்பனை செய்து கொண்டு கனவுலகிலேயே வாழும் விசித்திரமான பாத்திரம். அவரது வாழ்‌க்கையிலும் காதல் வருகிறது. அந்த காதலும் ஜெய்க்கு கனவாய் கலைகிறதா? அல்லது நிஜமாகிறாதா? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், சொல்லியிருக்கும் படம் தான் கனிமொழி.

இல்லாத கா‌தலை இருப்பதாக உணர்ந்து காட்சிக்கு காட்சி அகமும், முகமும் மலரும் ராஜேஷ் எனும் கதாபாத்திரத்தில் ஜெய் அசத்தலாக நடித்திருக்கின்றார். மற்ற படங்களை காட்டிலும் இதில் பல படங்கு அழகும், வசீகரமாகவும், தெரியும் ஜெய், அதற்காக படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சிதம்பரத்திற்கு ஸ்பெஷல் நன்றியும் சொல்ல வேண்டும். அனு எனும் கதாநாயகி பாத்திரத்தில் புதுமுகம் சாஷன் பத்மஸ்ரீ ஒரு அழகுபதுமையாக வந்து போகிறார். நடிப்பில் இன்னும் சற்றே முயற்சித்திருந்தால் வந்திருக்கும்.

ஜெய் விரும்பி அவருக்கு கிடைக்காத பொருள் எல்லாம்,  கவுசிக் எனும் பாத்திரத்தில் நடித்துள்ள சென்னை-28, விஜய்வசந்த்திற்கு, கிடைக்கிறது. அவ்வாறே கதாநாயகியும் இவருக்கு கிடைப்பது ஜெய் மீது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பரிதாபத்தையும், பச்சாதாபத்தையும், வரவழைப்பதுதான் கனிமொழி படத்திற்கு கிடைக்கும் வெற்றி! இந்த மூவரை போன்றே ஜெய் நண்பர்களாக வரும் மைக்கேல், ரங்கா, தீபக், மூவரும் பளீச்சென்று நம் மனதில் பதிய புதிய இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசாமிக்கு கிடைத்த வெற்றி எனலாம். இவர் வெங்கட்பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

சதீஷ்சக்கர்வர்த்தியின் இசை, பி.சிதம்பரத்தின் ஒளிப்பதிவு, பிரியா மணிகண்டனின் உடை அலங்காரம் உள்ளிட்ட ஏகப்பட்ட ப்ளஸ்பாய்ண்டுகள் படத்தில் இருந்தும், கனிமொழியின் பின்பாதியில் இருக்கும் சுறுசுறுப்பும், விறுவிறுப்பும், முன்பாதியில் இல்லாமல் அடிக்கடி பெட்ரூம், பாத்ரூம், புட்-பால் டீம், மச்சான் மாமன் பிரண்ட்ஷிப் என போரடிப்பது காய்மொழியாக கசக்கிறது. முன்பாதியில் ஸ்ரீபதி இன்னும் சற்று முயன்றிருந்தால் கனிமொழி கற்கண்டு மொழியாக இனித்திருக்கும்.