Archive for the ‘Kanden Movie Review’ Category

கண்டேன்

கிராமத்து பாசக்கார தாத்தாவின் திடீர் திருமண ஏற்பாடுகளில் இருந்து தப்பிப்பதற்காக, நகரத்தில் ஒரு பெண்ணை காதலிப்பதாக நாடகமாடுகிறார் ஹீரோ சாந்தனு. ஒரு மாதத்துக்குள் காதலியுடன் ஊர் திரும்ப வேண்டிய நிர்பந்தம் சாந்தனுவுக்கு! அதற்குள் மனதிற்கு பிடித்தவளை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் சாந்தனு, பார்வையற்றவர்களுக்கு உதவும் நாயகி ரேஷ்மியை கவர பார்வையற்றவர் போல் நடிக்கிறார். விரும்பியவருடன் விரும்பியபடியே திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெறும் சூழலில் சாந்தனுவின் பார்வை நிஜமாகவே பறிபோகிறது! அப்புறம் சாந்தனு – ரேஷ்மி காதல் கல்யாணத்தில் முடிந்ததா…? இல்லையா…? என்பது க்ளைமாக்ஸ்.

ஹீரோ சாந்தனு, காமெடியும், காதலும் கலந்து கட்டி கண் தெரியாதவர் போன்று நடிக்கும் காட்சிகளிலும் சரி, நிஜமாகவே கண் தெரியாமல் போய்விடும் காட்சிகளிலும் சரி, “ராஜபார்‌வை” கமல்ஹாசனை ஞாபகப்படுத்துகிறார். அதற்காக அவருக்கு சொல்லலாம் ஒரு சபாஷ்!

ஹீரோயின் ரேஷ்மி கெளதம், சாந்தனுவுக்கு ஏற்ற ஜோடியாக வந்து மரத்தை சுற்றி டூயட் பாடி செல்கிறார்.

பார்வையற்றவராக நடிக்கும் ஹீரோ, ஹீரோயினின் பரந்த மனசை கவரும் கதை சற்றே பழசு என்றாலும், அதை சாந்தனுவும், சந்தானமும் பண்ணும் காமெடி கலாட்டாக்கள், புதுசாக்கி இருப்பது பேஷ் பேஷ்… சொல்ல வைக்கிறது.

போலீஸ் ஆபிஸர் ஆசிஸ் வித்யார்த்தி, போட்டுக்கொடுக்கும் முத்துக்காளை உள்ளிட்டவர்களும் சாந்தனு, சந்தானத்திற்கு சளைத்தவர்கள் இல்லை… என்பதை மெய்பித்திருக்கின்றனர்.

விஜய் எபினேசரின் இசையும், பிரசாத் டி.மிஷாலேவின் ஒளிப்பதிவும், புதியவர் ஏ.சி.முகிலின் எழுத்து, இயக்கத்திற்கு பலம் சேர்த்துள்ளன!

“கண்டேன்” – “பார்க்கலாம்!”