Archive for the ‘kaadhal solla vandhen’ Category

காதல் சொல்ல வந்தேன்

வழக்கமான கல்லூரி காதல் கதைதான். ஆனால் அதை சற்றே வித்தியாசப்படுத்தி சீனியர் மாணவி மீது ஜூனியர் மாணவருக்கு ஏற்படும் காதலாக முடிவில் நிறைவேறாத சோகக்காதலாக சூடாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் பூபதி பாண்டியன். திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை, தேவதையை கண்டேன் படங்களின் இயக்குநர் இயக்கியுள்ள ஒரே காதல் படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. கதைப்படி பள்ளியில் ஒன்றாக படித்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள் பிரபு எனும் பாலாஜியும், சபேஷ் கார்த்திக்கும். ஜாலி பேர்வழிகளான இவர்களை சீனியர் மாணவிகள் சிலர் ராக்கிங் செய்ய அதில் ஒருத்தியான சந்தியா எனும் மேக்னா சுந்தரையே காதலிக்கத் தொடங்குகிறார் பிரபு. ஒல்லி பிரபு குண்டு சபேஷ் கார்த்திக் இவர்களது சுட்டித்தனத்தால் கவரப்பட்ட சந்தியாவோ இவர்களை தம்பியாக கருதி பாசத்தை பொழிய பிரபு பாலாஜியோ அது தெரியாமல் சந்தியாவை உயிருக்கு உயிராய் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் சந்தியாவிற்கு பாலாஜியின் காதல் தெரியவர கடுப்பில் அவரை விட்டு ஒதுங்கிறார். ஆனாலும் அவரை தொடர்ந்து காதலிக்கும் பாலாஜியின் காதல் நிறைவேறியதா இல்லையா? என்பது யாரும் எதிர்பாராத வகையில் படமாக்கி இருக்கும் நெஞ்சை உருக்கும் கிளைமாக்ஸாகி இருக்கிறது.
பிரபுவாக பாலாஜி, சந்தியாவாக மேக்னா சுந்தர் இருவரும் பாடத்திற்கேற்ற தேர்வு. இண்டெர்வெல்லுக்கு முன் அக்கானு கூப்பிடு.. என மேக்னா சுந்தர் கூறும் இடத்தில் பிரபு, மேக்னா இருவரது நடிப்பும் சபாஷ் சொல்லும் அளவு பிரமாதம். இயற்கை உபாதையின் சப்தத்தை செயற்கை மிஷின் ஒன்றின் மூலம் தன் குண்டு உடம்பின் மூலம் உண்டாக்கும் சபேஷ் கார்த்திக் செம காமெடி. சின்ன சின்ன காட்சிகளில் கூட டைரக்டர் டச் எனப்படும் தன் தனித்தன்மையை நிருபித்து இருக்கிறார் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கும் ஜி.பூபதி பாண்டியன். ஆனால் கிளைமாக்ஸில் காதலர்களை சேரவிடாது உருக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நாயகரை நாயகியின் கண் எதிரே அவர்கள் தினமும் பயணிக்கும் பேருந்து சக்கரத்திற்கே பலியாக்குவது நம்பும் படியாக இல்லை. யுவன்சங்கர் ராஜாவின் இசையில் ஐந்து பாடல்களும் , ராஜாவின் ஒளிப்பதிவும், பிரவீன் – ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பும் படத்தின் பெரும்பலம். ஆகமொத்தத்தில் தூய்மையான நல்ல காதலை சொல்லவந்துள்ள படம் காதல் சொல்ல வந்தேன்.