Archive for the ‘Irumbu Kottai Murattu Singam Movie Story Review’ Category

இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்

சீறிப்பாயும் அரேபியக் குதிரை, இரண்டுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், அழகிய தொப்பி, அசத்தலான கோட் சூட், ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகிகள் என ஜெய்சங்கர் காலத்திற்குப் பின் தமிழ் சினிமாவில் கவுபாய் கலாச்சாரத்தை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன். இந்த ஒரு காரணத்திற்காகவே இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தை பாராட்டலாம். இந்த ஒரு காரணம் மட்டுமல்ல… நாம் இழந்த நம் இலங்கை சொந்தங்களையும் கூட இலைமறை காயாக ஆங்காங்கே ஞாபகப்படுத்தி நம் உணர்வுகளை தூண்டி விட்டிருக்கிறார் வம்பு! சாரி… சிம்பு!

கதைப்படி நம்மூரில் கிழடு கட்டை என்போமே…. அதுமாதிரி வயசான நாசரை கிழக்கு கட்டை எனும் பெயரில் உலவ விட்டு, அவரது ராஜ்யத்தின் கிழ் பல பகுதிகளை வாழ விட்டிருக்கிறார். அப்படி ஒரு அடிமை பகுதியில் வசிக்கும் சிங்கம் லாரன்ஸ், நாசரை எதிர்க்கிறார். இந்நிலையில் அவர் காணாமல் ‌‌போக, சிங்கத்திற்கு ஆதரவானவர்கள் ஒன்று கூடி, வேறு ஒரு ஏரியாவில் சிங்கம் கெட்-அப்பிலேயே இருக்கும் சிங்காரத்திற்கு சிங்கம் வேஷம் போட்டு, அழைத்து வருகின்றனர். சிங்கம் மாதிரி கவுபாய் கெட்-அப் கொடுத்து அழைத்து வரப்படும் மற்றொரு லாரன்ஸ் நிஜத்தில் பயந்தாங்கொல்லி. அவர் கிழக்குகட்டை நாசரை எதிர்த்து ராஜ்ஜியத்தை கைப்பற்றினாரா, அல்லது அடிபணிந்து அடிமை மக்களை மலுேம் அடிமையாக்கினாரா? என்பது மீதிக்கதை! இதனூடே பத்மப்ரியா, லட்சுமி ராய், சந்தியா ஆகிய மூன்று நாயகிகளுடனும் லாரன்ஸ் சலிக்க சலிக்க டூயட் பாடி ஆடுவது கலர்புல் களேபரம்!

இரண்டு லாரன்ஸ்களும் தங்கள் கவுபாய் பங்கை கலக்கலாக செய்திருக்கின்றனர். அவரை மாதிரியே கதாநாயகிகள் பத்ம்பரியா, லட்சுமிராய், சந்தியா உள்ளிட்டவர்களும் தங்கள் பணியை பக்காவாக செய்திருக்கிறார்கள். கலக்கல் கவர்ச்சி மூலம் உடம்பை சிலிர்க்க வைக்கிறார்கள். நாயகர், நாயகிகளைப் போன்றே வில்லன் நாசர், வி.‌எஸ்.ராகவன், மனோரமா, டெல்லிகணேஷ், சாய்குமார், எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ் உள்ளிட்டவர்களும் சபாஷ் சொல்ல வைக்கின்றனர். அதிலும் செவ்விந்தியராக வரும் எம்.எஸ்.பாஸ்கரும், அவரது மொழிப்பெயர்ப்பாளராக வரும் சாம்சும், அவர்கள் பேசும் பாஷையும் செம காமெடி… சரவெடி! இயற்கை உபாதைகளை எல்லாம் காமெடி ஆக்க முயற்சித்திருப்பது உள்ளிட்ட ஒருசில உவ்வே விஷயங்கள் தவிர, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் ஓ.கே.

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையும், அழகப்பனின் ஒளிப்பதிவும், முத்துராஜின் கலை இயக்கமும் இப்படத்திற்கு பெரிய பலம். சிம்புதேவனின் இயக்கத்தில் 23ம் புலிகேசி அளவு இரும்பு ‌கோட்டை முரட்டு சிங்கம் இல்லை என்றாலும்… மோசமும் இல்லை.