கோரிப்பாளையம்
Posted in Goripalayam Movie Review, latest tamil movie, tamil film review on 05/12/2010 10:17 am by admin
உலகிலேயே முதல்முறையாக 10 டைரக்டர்களை நடிக்க வைத்து, மாயாண்டி குடும்பத்தார் என்ற படத்தை இயக்கி சாதனை படைத்த டைரக்டர் ராசுமதுரவனின் அடுத்த படைப்புதான் கோரிப்பாளையம். மதுரை புறநகரில் வசிக்கிற, தூக்கத்தை தொலைத்த 4 இளைஞர்களை பற்றிய கதை இது. திசை மாறி சென்ற அந்த இளைஞர்களின் வாழ்க்கையில் நடந்த, புரட்டிப்போடும் சம்பவங்களை யதார்த்தமாக சொல்லும் கதை இது. அடுத்து என்ன நடக்கும்? என்ற ஆர்வமும், திகைப்பும் படம் முழுக்க இருக்கும். “மாத்தியோசி” படத்தில் நடித்து வரும் ஹரிஸ், “குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்” ராமகிருஷ்ணன், ஆர்ட் டைரக்டர் வீரசமர், புதுமுகம் பிரகாஷ், ரகுவண்ணன், முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் விக்ராந்த் ஆகிய ஆறு பேர்களும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகிகளாக மாயாண்டி குடும்பத்தார் பூங்கொடி மற்றும் 2 புதுமுகங்கள் நடிக்கின்றனர். இவர்களுடன் சிங்கம்புலி, ரவிமரியா, ஜெகன்னாத், நந்தா பெரியசாமி ஆகிய 4 டைரக்டர்களும், மயில்சாமி, இளவரசு ஆகியோரும் படத்தில் பங்கேற்கிறார்கள். ஆபாசம், வன்முறை இல்லாத படமாக உருவாகியிருக்கிறது கோரிப்பாளையம்.
பாலபரணி ஒளிப்பதிவு செய்ய, சபேஷ்-முரளி இசையமைக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்கிறார் ராசு மதுரவன். பாண்டியநாடு தியேட்டர்ஸ் தயாரிக்கிறது. இணை தயாரிப்பு: உசிலன் சிவகுமார். மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் படம் வளர்ந்துள்ளது.
கோரிப்பாளயைம் படம் குறித்து ராசு மதுரவன் கூறுகையில், மதுரை என்றால் மீனாட்சி அம்மன் கோவிலையும், வைகை ஆற்றையுமே காண்பித்து பழகியிருப்பார்கள். ஆனால், நான் காட்டப் போகும் கோரிப்பாளையத்தில் மதுரை வேறு மாதிரி இருக்கும். அந்த ஊரில் வாழவே லாயக்கில்லாத இடங்களில் வாழும் குடும்பத்தை பற்றியும், அங்குள்ள சில இளைஞர்களை பற்றியுமான கதைதான் இது. வில்லன்களை அடித்து பந்தாடும் ஹீரோக்களையே பார்த்து பழகியவர்களுக்கு இந்த ஹீரோக்கள் கொஞ்சம் வித்தியாசப்படுவார்கள். இவர்கள் வில்லன்களுக்கு அஞ்சி ஓடுவதும், அவர்களின் வலியும்தான் கதை. படம் பார்ப்பவர்கள் அழாமல் வெளியே வர முடியாது, என்கிறார்.










