எதுவும் நடக்கும்
Posted in ethuvum film review, latest tamil movie, tamil film review on 01/31/2010 09:53 am by adminஒரு பெரிய வீடு, ஐந்தாறு கேரக்டர்களை வைத்துக் கொண்டு வித்தியாசமும், விறுவிறுப்புமான திகில் படம் தர முடியுமா? என சந்தேகமாக கேட்பவர்களுக்கு, தாராளமாக முடியும் என பதில் சொல்லி இருக்கிறது எதுவும் நடக்கும் திரைப்படம்!

கதைப்படி ஒரு வயதான கோடீஸ்வரரின் மாளிகையில் பாதுகாவலராக இருக்கும் கார்த்திக்குமாருக்கு பெரிய நடிகராகும் ஆசை. அது இயலாமல் போன வருத்தத்தில் சற்றே சைக்காவாகவும் திரிபவர். தனது நடிப்பாசையை பழித்ததால் மனைவியையே கொன்றுவிட்டு, அந்த பங்களாவில் வேலை பார்க்கிறார்.
இது தெரியாமல் அமெரிக்காவில் இருநு்து தாத்தாவை பார்க்க, தாத்தா ஊரில் இல்லாத நேரமாக பார்த்து வரும் பேத்தி அபர்ணா நாயர், கார்த்திக் குமாரிடம் நட்பு பாராட்டுகிறார். கார்த்திக்கின் பின்புலத்தை விசாரிக்கும் அபர்ணாவும், அவரது நடிப்பு திறமையை சோதித்து பார்க்க விரும்பி, நாம் இருவரும் கணவன் – மனைவியாக நடித்து பார்க்கலாம் எனக் கூற, அப்படியே செய்யும் கார்த்திக் குமார், ஒரு கட்டத்ததில் அபர்ணாவை தன் நிஜ மனைவியாக கருதி, அடி – உதையில் இறங்கி அவர், ஏளனம் செய்ததையெல்லாம் சுட்டிக் காட்டி போட்டுத் தள்ள பார்க்கிறார். ஆபத்தை உணரும் அபர்ணா, அதில் இருந்து தப்பித்தாரா, இல்லையா? என்பதுதான் திகிலும், திருப்பங்களும் நிறைந்த மீதிக் கதை!

ஹீரோவாக கார்த்திக் குமார் அப்பாவித் தனத்திலும் சரி… சைக்கோ தனத்திலும் சரி… பாத்திரமறிந்து நடித்து சபாஷ் வாங்குகிறார். ஹீரோயினாக அபர்ணா நாயர் அமெரிக்க ரிட்டர்ன் பெண்ணாக அலட்டல் இல்லாமல் நடித்து தானும் பயந்து, நம்மையும் பயமுறுத்தி அப்ளாஸ் வாங்குகிறார்.

தாத்தா கேரக்டர், அவரது போன் காலால் வரும் போலீஸ்காரர்கள் தவிர வேறு யாரும் படத்தில் கிடையாது என்பதால் சலிப்பு தட்டுகிறது. அதேமாதிரி அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்க முடிவதும் படத்தின் பலவீனம். ஒரே ஒரு லொகேஷனில் பெரும்பாலான கதையையும், காட்சிகளையும் படம் பிடித்து பயமுறுத்தி இருக்கும் இயக்குனர்கள் ரொஸாசியோ – மகேஸ்வரன் இருவரையும் பாராட்ட வேண்டும். பெர்னார்ட்டின் ஒளிப்பதிவும், ராஜின் இசையும் இயக்குனர்களது முயற்சிக்கு பயமுறுத்தும் பக்கபலம்.






