எத்தன்
Posted in Eththan Movie Review, latest tamil movie, tamil film review on 06/07/2011 06:22 am by admin
திருடன் கையிலேயே கல்லாபெட்டியின் சாவியை கொடுத்த கதையாக, ஊரைச்சுற்றி கடனை வாங்கிவிட்டு எத்தனாகவும், எமகாதகனாகவும், எகத்தாளமாகவும் பேசித்திரியும் ஹீரோ விமல் கையில், அந்த ஊர் வங்கியில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாதவர்களை வலை வீசி பிடிக்கும் வேலை வந்து சேருகிறது!
விமலுக்கு கடன் கொடுத்துவிட்டு அவரை மிரட்டி திரிந்தவர்களையெல்லாம், விமல் மிரட்டியும், விரட்டியும் பிடிக்க வேண்டிய சூழல்! அதனூடே தாதா மாமனுக்கு தாரமாக வேண்டிய சனுஷாவுடன் காதல்!! இரண்டிலும் எத்தன் விமல் எப்படி வெற்றி பெறுகிறார்…? என்பது மீதிக்கதை!

எத்தனாக விமல் செம ஜித்தன் என சொல்லும் வகையில் நடித்து சபாஷ் வாங்கிவிடுகிறார். காலை 4 மணிக்கு கடன்காரர்களுக்கு பயந்து எழுந்து ஓடுவதும், ஒவ்வொரு இந்தியனும் 30ஆயிரம் கடனில் தான் இருக்கிறான். இந்தியாவே கடனில்தான் இருக்கிறது…, டாடா – அம்பானி கூட கடன் வாங்கிதான் பிஸினஸ் செய்கிறார்கள் என்று லாஜிக் பேசுவதுமாக படம் முழுக்க பட்டையை கிளப்பி இருக்கிறார் மனிதர்!
நாயகி சனுஷா செல்வி பாத்திரத்தில், தந்தையை கொன்ற தாத மாமனின் தாலிக்கு தலை கொடுக்க பிடிக்காமல், வீட்டை விட்டு வெளியேறும் காட்சிகளில் நம்மை சீட் நுனிக்கு கொண்டு வந்து விடுகிறார்.
வில்லன் சரோஜித் தாதா பாண்டியன் பாத்திரத்தில் சக்கைபோடு
போட்டிருக்கிறார். நல்ல எதிர்காலம் இருக்கிறது இவருக்கு என எண்ணும்படியாக அமைந்துள்ளது இவர் பாத்திரம். விமலின் அப்பாவாக ஜெயபிரகாஷ், அம்மாவாக மாஜி நாயகி பிரகதி, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, சிங்கம்புலி நந்தா சரவணன் எல்லோரும் பாத்திரம் உணர்ந்து பளிச்சிட்டிருக்கிறார்கள்.
தாஜ்நூரின் தன்னிகரில்லா இசையும், கே.பி.ஆர்.ரமேஷின் ஒப்பற்ற ஒளிப்பதிவும், ராஜா முகமதுவின் பக்குவமான படத்தொகுப்பும், எல்.சுரேஷின் வாள்முனை போன்ற வீரிய வசனங்களும், இயல்பான இயக்கமும் எத்தனின் ப்ளஸ் பாயிண்டுகள்!
மொத்தத்தில் “எத்தன்” – “ஜித்தன்”, நிச்சயம் ரசிகர்களை ஆக்குவான் “பித்தன்”.






