அரும்புமீசை குறும்புபார்வை
Posted in Arumbu Meesai Kurumbu Paarvai Movie Review, latest tamil movie, tamil film review on 07/23/2011 05:24 am by admin
அரசு விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மாணவர்களின் அவலங்களையும், அபிலாஷைகளையும் அலசி ஆராய்ந்திருக்கும் படம்தான் “அரும்பு மீசை குறும்பு பார்வை”.
குணசேகரன் உள்ளிட்ட ஏழை மாணவர்கள் தங்கி பயிலும் தாமரைக்குளம் அரசு மாணவர் விடுதியில், மண்ணார் உள்ளிட்ட உள்ளூர் ரவுடிகளால் அனுதினமும் குடியும், கூத்தும், கும்மாளமும் அரங்கேறுகிறது. இதை ஆரம்பத்தில் கண்டும் காணாமல் இருக்கும் விடுதி வார்டனும், மாணவர்களும் ஒரு கட்டத்தில் வெகுண்டெழுகின்றனர். அதன் விளைவு என்ன என்பதுடன், ஒரு அழகிய பள்ளிப்பருவ காதலையும் கலந்து கட்டி கதை சொல்லி இருப்பது “அரும்பு மீசை குறும்பு பார்வை” படத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
குணசேகரனாக புதுமுகம் சந்துரு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் நடித்திருக்கிறார். கதையின் நாயகி ஜெயந்தியாக புதுமுகம் ஹாசினியும் அவ்வாறே செய்திருக்கிறார். வார்டனாக ஆர்.மோகன்பாபு வாழ்ந்திருக்கிறார். மூவேந்திரனாக ஒல்லிக்குமார், வில்லன் மண்ணாராக பிரதீப்பெல்கிஸ், சமையல்காரராக தெய்வேந்திரன், ஊத்தடியனாக உக்கிரபாண்டி பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
அரசாங்கம் தலைக்கு இவ்வளவு என கம்மியாக தரும் காசை கருத்தில் கொண்டு, தாறுமாறாக மாணவர்களுக்கு முடிவெட்டிவிடும் தொழிலாளி, கஞ்சாவும், கையுமாக சதா சர்வகாலமும் அலட்சியமாக இருக்கும் விடுதி வாட்ச்மேன், சமையல் பொருட்களை மிச்சப்படுத்தி திருடும் சமையல்காரன், ரவுடி வில்லன் கோஷ்டியை தனித்தனியாக
நாற்பது கிலோ மீட்டர் சட்டை இல்லாமல் நடக்க விடும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட கேரக்டர்கள் மூலம் இயக்குநர் வெற்றிவீரன் வித்தியாசமாக வெளிப்பட்டிருக்கிறார்.
முகம்மது ரிஸ்வானின் இனிமையான இசை, மகேஷ் கே.தேவ்வின் எளிமையான ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் வெற்றி வீரனின் எழுத்துக்கும், இயக்கத்திற்கும் பலம் சேர்த்து, “அரும்பு மீசை குறும்பு பார்வை” படத்தை, “முரட்டு மீசை முதல் கிழட்டு நரைத்த மீசை வரை” சகல தரப்பினரையும் திரும்பி பார்க்க வைக்கும்!






