அகம் புறம்
Posted in Agam Puram Movie Review, latest tamil movie, tamil film review on 12/14/2010 05:39 am by admin
தி.நகர் படத்தை இயக்கிய திருமலை, தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்து, தனது டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் மூலம் தயாரித்து, இயக்கி இருக்கும் படம்தான் அகம் புறம்.
கதைப்படி நாயகர் ஷாம் ஒரு பெரும் போதை மருந்து கடத்தல்காரரிடம் (டான்…?) கையாளாக விசுவாசமாக வேலை பார்க்கிறார். இவரது உண்மை, உழைப்பு, விசுவாசத்தை பார்த்து எனக்கு பின் என் தொழிலுக்கும் சொத்து பத்துக்கும் நீதான் வாரிசு… என அந்த கடத்தல்காரர் ஷாமை பார்த்து சொல்லிக் கொண்டிருக்கும்போதே இறந்து விடுகிறார். பதறி துடிக்கும் ஷாம், கடத்தல் டானை நல்லடக்கம் செய்துவிட்டு, அவர் சொன்னது மாதிரியே அவரது தொழிலை (நல்லவேளை டானுக்கு குடும்பம் குட்டிகள் இல்லை…) அண்டர்டேக் செய்து அசத்தலாக கவனிக்கிறார்.
விடுவார்களா அந்த டானின் கையாட்களாக, ஷாமுக்கு அடுத்தடுத்த நிலையில் இருந்த கூட்டாளிகள்?! ஷாமுக்கும், அவரது போதை பிஸினசுக்கும் பெரும் தொல்லை கொடுக்கிறார்கள். மற்றொரு பக்கம் கெட்ட போலீஸ் சேரன்ராஜ், நல்ல போலீஸ் ஆனந்த்ராஜ் ஆகியோரின் தீவிர கலாய்ப்பு கண்காணிப்பு வேறு! இத்தனையையும் மீறி… பாரீன் லொகேஷன்களுக்கெல்லாம் பறந்து பறந்து போய் பிஸினஸ் டீல்களை முடித்து, ஒரிஜினல் சரக்குகளை (ஷாமின் கூட்டாளிகள் விநியோகிக்கும் சரக்கு உடம்பிற்கு உடனடியாக தீங்கு விளைவிக்கும் டூப்ளிகேட் சரக்காம்! அடடே!!) இந்தியாவில் சப்ளை செய்வதுடன், அவ்வப்போது சமூக சேவை செய்யப் போன இடத்தில்கிடைத்த நாயகி மீனாட்சியுடன் பாரீன் மரங்களை, கட்டிடங்களை எல்லாம் சுற்றி டூயட் பாடவும் செய்கிறார். இப்படியாக போய்க் கொண்டிருக்கும் கதையில், திடீர் திருப்பமாக தனது கிராமத்து அம்மா மீரா கிருஷ்ணனுக்காக எல்லாவற்றையும் விடுத்து ஷாம் போலீசில் அப்ரூவர் ஆவதுதான்
க்ளைமாக்ஸ்! அட!!
ஏதோ அந்தக் காலத்து ஜெய்சங்கர் படம் மாதிரி ஒரு போதை மருந்து கடத்தல் கதையை கையில் எடுத்துக் கொண்டு, அதை திறம்பட செதுக்க முயற்சித்து, அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் திருமலை. அவர் சொன்னதை அப்படியே செய்து ஆக்ஷன் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் தூள் பரத்தியிருக்கிறார் ஷாம். 12பி, இயற்கை படங்களில் பார்த்த ஷாமின் மற்றொரு புறத்தையும், அகத்தையும் காட்டும் படமென்றாலும் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு இந்தப் படம் திருப்தியை தரும் என்பது புரியாத புதிர்.
ஷாம் மாதிரியே படத்தின் கதாநாயகி மீனாட்சியும் தன் பங்கை சரியாக செய்து, கவர்ச்சி புரட்சி செய்திருப்பது ஆறுதல். அம்மா மீரா கிருஷ்ணன், மாமன் அலெக்ஸ், அனுமோகன், மனோபாலா, சேரன்ராஜ், சிசர் மனோகர் என எல்லோரும் வழக்கம்போலவே வந்து போனாலும் இதுநாள்வரை வில்லனாக வந்துபோன ஆனந்தராஜ் நல்ல போலீஸாக வருவது புதுமை! இந்த ஒரு வித்தியாசத்திற்காகவும், சுந்தர் சி. பாவின் இதமான இசை, ஒய்.என்.முரளியின் பதமான ஒளிப்பதிவு உள்ளிட்டவைகளுக்காகவும் அகம் புறம் படத்தை இதம் பதம் எனலாம்.






