பாணா
Posted in Baana Kaathadi Movie Review, latest tamil movie, tamil film review on 08/18/2010 09:50 am by admin
மூன்றாம் பிறை, இதயம், பார்த்திபன் கனவு, எம் மகன் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்து அளித்த பிரபல தயாரிப்பாளர் சத்யஜோதி மூவிஸ் டி.ஜி.தியாகராஜனின் லேட்டஸ்ட் தயாரிப்பு,”பாணா காத்தாடி”. நடிகர் முரளியின் மகன் அதர்வா, கதாநாயகனாக அறிமுகமாகிறார். பத்ரி வெங்கடேஷ் இயக்கும் முதல் படம் இது. முதல் மேட்சிலேயே செஞ்சுரி அடிப்பது போல் அதர்வா, பத்ரி வெங்கடேஷ் இருவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். எந்த இடத்திலும் சிறு தொய்வு இல்லாமல்,
விறுவிறுப்பாக செல்கிறது படம்.
சென்னையில் ஒரு குடிசை மாற்றுவாரிய குடியிப்பை கதையின் தளமாக அமைத்திருப்பதே வித்தியாசமான முயற்சி. ப்ளஸ் டூ மாணவரான அதர்வாவும், அவரது நண்பர்களும் காத்தாடி விடுவதையே உயிர் மூச்சாக நினைக்கிறார்கள். அறுந்து போன காத்தாடியை அதர்வாவும், நண்பர்களும் துரத்தும் போது, ஃபேஷன் டெக்னாலஜி படிக்கும் பணக்கார மாணவியான சமந்தா மீது அதர்வா மோதுகிறான். சமந்தா கல்லூரி ப்ராஜெக்ட் உள்ளடங்கிய பென்-டிரைவ், அதர்வாவிடம் சென்று விடுகிறது. அதை தேடும் சமந்தா, சண்டையில் ஆரம்பித்து பின்பு நல்ல சிநேகிதியாகிறாள். தன் காதலை அவளிடம் அதர்வா சொல்லும் போது எதிர்பாராத நிகழ்ச்சியால் கோபமடையும் சமந்தா அவனை வெறுக்கிறாள். அதே பகுதியில் வசிக்கும் லோக்கல்
தாதா பிரசன்னா, முன்னாள் எம்.எல்.ஏ.,வை கொல்வதை, அதர்வா நேரில் பார்க்க நேரிடுகிறது. அதைத் தொடர்ந்து, பல பிரச்னைகள், போலீஸ் தேடல் என எதிர்பாராத கிளைமாக்சுடன் படம் முடிகிறது.
இதுதான் முதல் படம் என்றாலும் அதர்வா, இயல்பாக, யூத் புல்லாக நடித்திருக்கிறார். பசங்களுடன் கலாய்க்கம் போதம் சரி, சமந்தாவுடன் பழகும் போதம் சரி முழுமையான ஓ.கே. போலீஸ் ஸ்டேஷனில் அவமானப்படும் போது, தாயுடன் பாசமான காட்சிகளிலும் சரி, மேலும் சிறப்பாக செய்திருக்கிறார். சில காட்சிகளில் சிம்புவை நினைவுபடுத்துகிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு பாசமிக்க தாயாக வரும் மெளனிகாவிற்கு ஒரு சபாஷ் போடலாம்.கருணாசின் காமெடி படத்திற்கு நிச்சயம் ஒரு பிளஸ் பாயிண்ட். தந்தை டி.பி.கஜேந்திரன் தன் சட்டை பையில் வைக்கம் நூறு ரூபாய் நோட்டுக்களை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்று கருணாஸ் பல தடவை முயல்வதும், ஒவ்வொரு முறையும் ஏமாந்து போவதும், அதற்கு தந்தை தரும் விளக்கமும் புதுமையான நகைச்சுவை. படத்தின் முக்கிய திருப்பமும் கருணாஸால் ஏற்படுகிறது.
ஃபேஷன் டெக்னாலஜி படிக்கிறாள் என்று கதையில் வருவதால் டைரக்டர், சமந்தாவின் ஆடையில் அதிக அக்கரை செலுத்தியிருக்கிறார் போலும். கிளாமரான லேட்டஸ்ட் டிசைன்களில் உடைகள் அணிந்து வரும் சமந்தாவின் நடிப்பு கச்சிதம்.பல புதுமைகளை டைரக்டர் பத்ரி வெங்கடேஷ் இப்படத்தில் செய்திருக்கிறார்.நண்பர்கள் மற்றும் தாய் சமந்தாவின் காதலைஆதரித்து பிரம்மாண்டமான தியேட்டரின் வெள்ளித்திரையில் தோன்றி பேசுவது, தமிழ் சினிமாவில் புதுமை. குஜராத், ஆமதாபாத் நகரின் நூற்றுக் கணக்கான வீடுகளிலிருந்து பறக்க விடப்படும் ஆயிரக்கணக்கான காத்தாடிகள் வானில் நிரம்பி பறக்கும் காட்சிகள் புதுமை.
படத்தில் ஒரு காட்சியில் நடிகர் முரளி தோன்றுகிறார். ” காதல் வந்தால், இதயத்திலே வைச்சுக்காம, தைரியமாக சொல்லுங்க” என்று அதர்வாவிற்கு அட்வைஸ் கொடுப்பார். நீங்க என் பண்றீங்க? என்று அதர்வாவின் நண்பர் கேட்க, முரளி எம்.பி.பி.எஸ்., இறுதி ஆண்டு படிக்கிறேன் என்பார். பதிலுக்கு அந்த நண்பர், எவ்வளவு வருஷமாடா இவர் காலேஷிலேயே படிச்சுக்கிட்டே இருப்பாரு? என்பார். நல்ல நக்கல்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஐந்து நல்ல பாடல்கள். “குப்பத்து ராஜாக்கள்” பாட்டு ஹிட் ஆகலாம். குஜராத்தில் வரும் காட்சிகளில் மாறுபட்ட பின்னணி இசையை கொடுத்திருக்கிறார்.ஜி.ராதாகிருஷ்ணனின் வசனங்கள்,பல இடங்களில் நச் சென்று இருக்கின்றன. “அழுடா, நல்லவன் தான் அழுவான்” என்று அதர்வாவின் அம்மா கூறுவார். ரிச்சர்ட் நாதன் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அதர்வா-பத்ரி வெங்கடேஷ் காம்பினேஷனில் பாணா காத்தாடி உயரத்தில் பறக்கும்.பத்ரி வெங்கடேஷ் திரைப்படக் கல்லூரியில் சில ஆண்டுகள் லெக்சரராக பணி புரிந்திருக்கிறார். எந்த டைரக்டரிடமும் பயிற்சி பெறாமல் முதல் படத்தை இயக்கியிருக்கிறார், பாராட்டுக்கள்.






