மிளகா

அடாவடி கும்பல் ஒன்றால் அர்த்தம் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இளம்பெண் ஒருத்திக்கு, தன்னை வறுத்திக் கொண்டாலும் வருத்தம் இல்லாமல் விடுதலை பெற்று தந்ததுடன் நிறுத்திக் கொள்ளாமல் பொருத்தமான ஜோடியாகும் இளைஞனின் கதைதான் மிளகா.

மதுரை பக்கம் அழகர்மலையில் மிளகாய் மண்டி வைத்திருக்கும் வயசான அப்பாவிற்கு ஒத்தாசையாக இல்லாமல் ஓயாமல் உபத்திரம் தரும் பிள்ளை அழகர். ஆனால் நண்பர்கள் யாவருக்கும் நல்லவர். தன் தண்பன் ஈசு எனும் ஈஸ்வரனின் பர்னிச்சர் கம்பெனி திவால் ஆகும் அளவிக்கு பதினெட்டரை லட்சம் ரூபாய்க்கு பொருங்கள் வாங்கிக் கொண்டு பணத்தை திருப்பி கட்டாதவர்களிடம் கடனை வசூலிக்கும் ‌பொறுப்பை ஏற்றுக் கொண்டு களம் இறங்குகிறார் அழகர். அவரது அடாவடித்தனதாலும், அதில் தென்படும் நியாய தர்மத்திலும் ஈர்க்கப்பட்டு, தானும் தன் குடும்பமும் அயோக்கிய கும்பல் ஒன்றால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையை சொல்கிறார் கதாநாயகி தேன்மொழி. தேன்மொழிக்காக மதுரையையே கலக்கும் அந்த அயோக்கிய அண்ணன் – தம்பி கும்பலிடம் மோதும் அழகரும் அவரது நண்பர்களும் சந்திக்கும் சோதனைகளும், சாதனைகளும்தான் மிளகா படத்தின் மீதிக்கதை!

நாளை எனும் படத்தில் சில வருடங்களுக்கு முன் ஷாலினி அஜீத்தின் சகோதரர் ரிச்சர்டுடன் இரண்டு நாயகர்களில் ஒருவராக அறிமுகமாகிய ஒளிப்பதிவாளர் நட்ராஜ்தான் இதில் ஒரே நாயகர். பூங்கொடி, சுஜா என இரண்டு நாயகிகள். அழகராக வரும் நட்ராஜும் சரி… தேன்மொழியாக வரும் பூ‌ங்கொடியும் சரி… வீட்டு ஓனர் சவுமியாவாக வரும் சுஜாவும் சரி… சபாஷ்.. சரியான போட்டி என சொல்லும் அளவுக்கு நடித்திருக்கின்றனர்.

நட்ராஜின் நண்பர்கள் சிங்கம்புலி, ஜெகன்னாத், மாயி சுந்தர் அண்ட் கோவினர் பண்ணும் காமடி கலாட்டாக்கள் படம் முழுக்க சிரிப்பலையை கிளப்பி வயிற்றை புண்ணாக்கி விடுகின்றன என்றால் மிகையல்ல! அண்ணன்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்போகும் நீதிபதியை போட்டுத் தள்ளிவிட்டு, ஜெயிலுக்கு போய் திரும்பி, பின் பைத்தியமாகி கத்தும் ரவிமரியாவும் சரி.. அவரது சகோதரர்கள் நான் கடவுள் ராஜேந்திரன், அஞ்சாதே ஸ்ரீதர், ஆரோக்யதாஸ் ஆகியோரும் சரி… பார்த்தாலே பயமுறுத்தும்படியான வில்லன்கள். ஆனாலும் அடுத்த வீட்டுப் பெண்ணை அடைத்து வைத்துக் கொண்டும், அவளது அப்பா – அம்மா – தம்பியை கடத்தி வைத்துக் கொண்டும் அவர்கள் படுத்தும் பாடு ஏன்? அந்த ஊரில் நல்ல போலீஸ் நாலு பேர் கூட கிடையாதா? எனும் கேள்வியை எழுப்புகிறது.

‘மிளகா’ அழகர் – நடராஜின் மிளகா மண்டி அப்பாவாக ஜி.எம்.குமார், சின்ன வீட்டுக்கு கடன் வாங்கிய வகையில் கட்டை விரலை அடுத்தடுத்து பறிகொடுத்து பரிதவிக்கும் தாதா இளவரசு அவர், தனக்கு ஒத்து வராதவர்களுக்கு தரும் வாழைப்பழ அதிரடி அடாவடி என மிீளகா படம் முழுக்க காரசாரமாகவே இருக்கிறது.

கவர்ச்சி ரசமாக சபேஷ் – முரளியின் இசையில் ஒலிக்கும் பாடல்களும், அதற்கு பாலாஜி வி.ரங்காவின் ஒளிப்பதிவும் ஆறுதல். இசை, ஒளிப்பதிவு மாதிரியே வி.ஜெய்சங்கரின் பக்காவான படத்தொகுப்பும், சுப்ரீம் சுந்தரின் சண்டை பயிற்சியும் படத்தின் பெரிய ப்ளஸ்கள்.

மொத்தத்தில் எஸ்.ரவிமரியாவின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் ‘மிளகா’ ரொம்பவே ‘அழகா’ வந்திருக்கிறது!

Tags: , , , , , , , , , , , , , ,  

Leave a Reply